ஞாயிறு, 13 ஜூலை, 2014

பொன்னியின் செல்வன் ( பதிவு 3 )


                                                      பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் குறித்த எனது மூன்றாவது பதிவு.

     பூங்குழலி:
                                         பூங்குழலி,  இவளை  வர்ணிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் கிடைக்கவில்லை, கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.கோடிக்கரை பேரழகி. தேவதைகளால் மண்ணிலும் வாழமுடியும் என்பதை இவள் தான் எனக்கு உணர்த்தினாள்,. தைரியத்தின் மறு உருவம். நான் பொன்னியின் செல்வன் படித்து கொண்டிருந்த நாட்களில் என் கனவுகளின் ராணி இவள் தான். என் நினைவுகளில் இம்சித்த இன்பமும் இவள் தான்.

பூங்குழலி
                                               
                                             அவள் மனிதர்கள் அனைவரும் இரக்கமற்றவர்கள் என்று நினைத்து வெறுத்தாள். மனிதர்களுடன் வாழ்வதை விட கொள்ளிவாய் பிசாசுகளுடன் வாழ்வது மேல் என்று கருதினாள். ஆனால் பொன்னியின் செல்வன் அருள்மொழியிடம் அவளுடைய எண்ணங்கள் முற்றிலும் மாறுபட்டு போனது. அவனிடம் தன் இதயத்தை பரிகொடுத்தாள்.அவனை நினைத்து உருக தொடங்கினாள். அவர் தன்னை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை பெருமையாக நினைத்தாள்.

                                             அவள் வந்தியதேவனை இலங்கைக்கு படகில் தனியாக அழைத்து செல்லும் போதும், அருள்மொழியை காப்பாற்றி நாகபட்டினத்தில் சேர்க்கும் படலம் படிக்கும் போது இப்படி ஒரு பெண்ணும் இருக்க முடியுமா என்ற ஆச்சர்யத்தில் மூழ்கி போனேன்.  அந்த நேரங்களில் எல்லாம் அவளுடனேயே என்னுடைய மனமும் பயணித்தது. அருள்மொழிகாக அவள் எவ்வளவோ கஷ்டங்கள் அடைந்தாள்.
                                         
                                               அது மட்டுமல்லாமல் அவள் வந்தியதேவனுக்கு  செய்த உதவிகள் தான் எத்தனை எத்தனை, சோழ பேரரசேஅவளுக்கு கடமைப்பட்டுள்ளது. அவள் சேந்தன் அமுதனை கலியாணம் செய்ய சம்மதித்த போது அவளிடம் எந்த பட்டத்துராணி ஆசையும் இல்லை. அவனுடைய உண்மையான காதலுக்காக பூங்குழலி தன் வைராக்கியத்தையும் புறக்கணித்தாள்.ஆனால் விதி வலியது என்பதை பூங்குழலியின் வாழ்விலும் நிரூபித்து விட்டது.
                                                   
                                                    இவளை முதன் முதலில் அந்தி மாலை நேரத்தில் கடலில் ஒரு தனியான படகில் நெஞ்சை உருக்கும்


     
     " அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல் தான் பொங்குவதேன்?
        
          நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
         
          காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
         
          வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே
         
          வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
           
          மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
         
          வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
         
          காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்? " 


                                            என்ற பாடலை பாடியவாறு கல்கி அறிமுக படுத்தினார். ஆனால் எனக்கு அப்போது தெரியாது, சாதாரண இந்த ஓடக்கார பெண் சோழ பேரரசின் சிம்மாசனத்திலும், என் இதய சிம்மாசனத்திலும் இப்படி கம்பீரமாக அமர்வாள் என்று.



                                                                                                           -தொடரும்
                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக